தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் நிச்சயம் நிறுவப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் நிச்சயமாக உருவாக்கப்படும் என்றும், அதற்கான கட்டமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன என்றும் கூறினார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றார். இதில் துறை செயலாளர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி ஆணையர் விஜயலட்சுமி, மாணவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:
- யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உடலைத் தூய்மையாக வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- இந்தியாவில் யோகா கல்லூரிகள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு.
- ஜூன் 30-ஆம் தேதி 59 சித்த மருத்துவர்களை சுமார் 171 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
சித்த பல்கலைக்கழக மசோதா ஆளுநரால் முதலில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. பின்னர் சட்டமன்றத்தில் திரும்பப்பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, ரூ.2 கோடியில் அலுவலக கட்டிடம் அமைக்கப்பட்டு, மாதவரத்தில் 25 ஏக்கர் நிலத்தில் பல்கலைக்கழகம் கட்டுவதற்கான நிலமும் தயார் நிலையில் உள்ளது.
மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தேவையான ஒப்புதல்களைப் பெற்ற பிறகு, சித்த பல்கலைக்கழகம் தமிழகத்தில் நிச்சயமாக உருவாகும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் கஞ்சா சாகுபடி 0% என தெரிவித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறும் இடங்களில் இது நடக்கின்றது என்றால், அரசு நடவடிக்கை எடுக்கத் தயார் என்று கூறினார். போதை பொருள் விற்பனையாளர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடும் தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவித்தார்.