தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு இடமில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (ஜூன் 7) கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு மறைத்து, பிற மாநிலங்களுக்கு வழங்குகிறது. இதற்கு மத்திய அமைச்சர் முருகன் பதில் கூற வேண்டும்.
தமிழ்நாட்டின் வரிப்பணியில் இருந்து பெறப்பட்ட தொகைகளை, பள்ளிக் கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி, மாநில பங்களிப்பு நிதி ஆகியவற்றில் தமிழகத்திற்கு ஒதுக்காததன் காரணம் என்ன? மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டை அந்நியமாக நடத்துகிறது? பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மக்களை அச்சப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்க விரும்புகின்றன. இதற்காகத்தான் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர்.
குஜராத், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளில் நடத்தப்படும் மாநாடுகள் வழியாக, அனைத்து இந்து கடவுள்களையும் ஒரே தரத்தில் வைத்து காட்டுவதற்கான முயற்சி இது. தென் மாநிலங்களில் கலவரங்களைத் தூண்ட முடியுமா என்பதையும் அவர்கள் பார்க்கின்றனர்.
மறுசீரமைப்பு திட்டம் தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. பாஜக திட்டம் செயல்பட்டால், தென் மாநிலங்களில் இருந்து மக்களவை உறுப்பினர்கள் குறைந்து விட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தென் மாநிலத்தின் பிரதிநிதித்துவமே குறையும். பாஜக திட்டமிட்டு இதைச் செய்ய முயற்சிக்கிறது.
மறுசீரமைப்பை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அப்படியானால் மக்களவையில் ஏன் அதிகமான இருக்கைகள் அமைக்கப்படுகின்றன? இப்போது எம்பிக்கள் 10 நிமிடத்திற்கு மேல் பேச இயலாத நிலை உள்ளது. எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரித்தால் பேசும் நேரம் கூட குறைந்து விடும். பழனிசாமிக்கு இது புரிகிறதா, அல்லது புரிந்தும் பேசுகிறாரா என தெரியவில்லை.
மறுசீரமைப்பு பாஜகவின் திட்டமிட்டபடி நடைபெற்றால், தமிழ்நாட்டின் உரிய பிரதிநிதித்துவம் களையப்படும். தென்னக மாநிலங்களின் பங்களிப்பு குறையும். வட மாநிலங்களின் பங்கு பெருகும். இதன் மூலம் அனைத்து முடிவுகளும் வட மாநிலங்களின் பிரதிநிதிகள் மூலம் எடுக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான பொறுப்பான புள்ளியியல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வருவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அவர்களின் எந்த முயற்சியும் வெற்றி பெறாது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு தமிழ் நாட்டில் இடமே இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.