மதுரையை மையமாகக் கொண்டு முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகளை ஈர்க்கும் நோக்கத்துடன், மேலும் அந்த சமூகத்தை தங்கள் பக்கம் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன,” என விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.
மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், மதுரையின் மத நல்லிணக்க பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று (ஜூன் 19) உலகத் தமிழ்ச் சங்கம் முன் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்த இந்த நிகழ்வில், விசிக தலைவர் திருமாவளவன், திரைப்பட இயக்குநர் அமீர், மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்வின் போது திருமாவளவன் முழக்கங்களை எழுப்பியதுடன், மனிதச் சங்கிலியின் பிரகடனங்களை வாசித்து வெளியிட்டார். பின்னர் அவர் உரையாற்றும் போது கூறியதாவது:
“பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள், வட இந்தியாவில் ராமர் பெயரை பயன்படுத்தி மதக்கலவரங்களை ஏற்படுத்தி, அதன்மூலம் மக்களைப் பிரித்து அரசியல் லாபம் தேடியதுபோல், இப்போது தமிழகத்தில் முருகனின் பெயரை கொண்டு அதே நிலையை உருவாக்க திட்டமிடுகின்றனர். தமிழ்நாடு என்பது மத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டான மண்.
இங்கே அனைத்து அரசியல் கட்சிகளிலும் முருக பக்தர்கள் உள்ளனர். இவ்வாறு, மதம் அல்லது கடவுளின் பெயரை கொண்டு மக்களை பிரிக்க முடியாது. இது 2026 சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைக்கும் ஒரு நீண்டகால அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மாநாடு நடத்தப்படுகிறது. இந்த சூழ்ச்சியில் முருக பக்தர்கள் ஏமாறக் கூடாது. மதநல்லிணக்க மரபு கொண்ட மதுரையில் இந்த மாநாடு நடைபெறுவது சந்தேகத்திற்குரிய விடயமாகும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது வடமாநிலங்களில் கலவரம் வெடித்தது. ஆனால் தமிழகத்தில் அமைதி நிலவியது. இப்போது அந்த அமைதியான மதுரையில் இந்நிகழ்வு நடப்பது கவலையளிக்கிறது. முக்குலத்தோர் சமூக வாக்குகளை பாஜக பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நாடார் சமூகத்தினரைத் தங்கள் பக்கம் கொண்டுவந்தது போல், இப்போது மதுரையை மையமாக்கி முக்குலத்தோர் சமூகத்தை அணுக முயல்கிறார்கள். ஆனால் இந்த சூழ்ச்சிக்கு எவரும் இரையாக மாட்டார்கள் என்பதற்காகவே மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சாதி அடிப்படையில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மதத்தின் பெயரால் தமிழர்களை பிளவுபடுத்தும் முயற்சியை சங் பரிவார் அமைப்புகள் உடனடியாக கைவிட வேண்டும். இல்லையேல், மக்கள் அவர்களின் வாலை ஒட்ட நறுக்கி விடுவார்கள். தமிழகம் ஒரு சகோதரத்துவத்தின் நிலம். இங்கு வன்முறை ஏற்படக்கூடாது என்பதற்காகவே நாங்கள் பொறுப்புடன் பேசுகிறோம். உங்கள் திட்டங்களை தமிழர் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். மதம் மூலம் தமிழக மக்களை பிளவுபடுத்த முடியாது,” எனத் திருமாவளவன் வலியுறுத்தினார்.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் விஜயராஜன், வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன், தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை மற்றும் பல சமூக, அரசியல் அமைப்புகள் பங்கேற்றன.