WhatsApp Channel
டி.ஆர்.பாலுவின் பேச்சை தொடர்ந்து திமுக, பாஜக எம்பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழக வெள்ள பாதிப்புகள் மற்றும் மத்திய நிவாரணம் குறித்து மக்களவையில் இன்று தி.மு.க. எம்.பி டி.ஆர்.பாலு பேசும்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டார். கோபமடைந்த டி.ஆர்.பாலு, “என்ன பேசறீங்க? நான் பேசும்போது ஏன் குறுக்கிட்டு பேசுறீங்க.. பேசாமல் உட்காருங்க.. என்ன வேணும்.. உங்களுக்கு அமைச்சரா இருக்க தகுதி இல்லை.. எம்.பி. ஆகவும் தகுதி இல்லை. . நீங்கள் பாராளுமன்றத்தில் ஒழுங்கான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.”
இந்த விவகாரம் மக்களவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய இணை அமைச்சர் திமுக எம்பி டி.ஆர். பாலு தன்னை அவமதித்ததாக பாஜக குற்றம் சாட்டுகிறது. எம்.பி.க்கள் மறியலில் ஈடுபட்டனர். குறிப்பாக பட்டியலின உறுப்பினரை தகுதியில்லாதவர்கள் என்று கூறி அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டினர். இதனால், திமுக, பாஜக எம்பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
டி.ஆர்.பாலு அரசியலுக்கு அவமானம். பட்டியலிடப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி அவர் தரக்குறைவான கருத்துக்களைத் தெரிவிப்பது இது முதல் முறையல்ல. மத்திய அமைச்சர் எல்.முருகன் குறித்து அவர் கூறிய கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூக நீதியின் உண்மையான நாயகனான பிரதமர் மோடி, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக்கியுள்ளார். தி.மு.க., பல ஆண்டுகளாக மத்திய அரசில் இருந்த போது இதை செய்ய முடியவில்லை.
மத்திய இணை அமைச்சரின் பொதுப்பணித்துறை, அமைச்சர் என்ற முறையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதிப்பாடு தி.மு.க., எம்.பி.,க்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
டி.ஆர்.பாலு போன்றவர்களால் மட்டுமே, பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரையும், அமைச்சரையும் தகுதியற்றவர் என்று கூற முடியும். டி.ஆர்.பாலு தகுதியற்றவர் என்று கூறியதற்காக பட்டியல் மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Discussion about this post