WhatsApp Channel
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் செயல்பாடுகள் மற்றும் கூட்டணி நிலை குறித்து தே.மு.தி.க. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது, கூட்டணி குறித்து ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தனித்தனியாக கருத்துகளைப் பதிவு செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டசபை தேர்தலையும் மனதில் வைத்து கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் தெரிவித்தனர்.
இந்நிலையில் தேமுதிக உயர்நிலைக் குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தலைவர் இளங்கோவன், துணைப் பொதுச் செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
Discussion about this post