மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
மாம்பழத்தின் விலை சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும், மரங்களை குத்தகைக்கு எடுத்து அதனை அறுவடை செய்துள்ளவர்களும் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டில் தமிழகத்தில் மாம்பழ உற்பத்தி அதிகரித்ததால் விலை மிகக் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகளும், குத்தகைதாரர்களும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளனர். ஆனால், அவர்கள் நிலைமையை புரிந்து கொள்ளாமல், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்பது வருந்தத்தக்கது” எனத் தெரிவித்தார்.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மாம்பழ சாகுபடி மிகுந்தளவில் நடைபெறுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் மாம்பழம் பயிரிடப்படுகிறது. சேலத்து மாம்பழங்கள் என்றழைக்கப்படும் பல பிரபலமான வகைகள் இங்கு அதிகமாக விளைகின்றன.
இந்த ஆண்டில், அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதால் லாபம் அதிகரிக்கும் என எதிர்பார்த்த விவசாயிகள், விலை சரிவால் பெரும் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் ரூ.22,000 முதல் ரூ.28,000 வரை விலை பெற்றிருந்தது. ஆனால் இப்போது, விலை ரூ.4,000 ஆக குறைந்துள்ளது. இந்த விலைக்கு விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு இலாபம் எதுவும் கிடையாது; மாறாக, ஏக்கருக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இழப்பு ஏற்படுகிறது.
மாம்பழத்தின் விலை வீழ்ச்சியால், விவசாயிகளுடன் சிறு வணிகர்களும், குத்தகைதாரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வறட்சி காரணமாக ஏற்கனவே நஷ்டம் சந்தித்த விவசாயிகள், இந்த ஆண்டில் நல்ல விலை கிடைக்கும் என நம்பி இருந்தனர். ஆனால் தற்போது அவர்களை விலை வீழ்ச்சி பெருமளவில் பாதித்துள்ளது.
விலை சரிவுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக, கொள்முதல் வியாபாரிகள் ஒன்றாக சேர்ந்து விலையை குறைத்திருப்பது, மாம்பழக்கூழ் ஆலைகளின் ஏற்றுமதி குறைவது, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தடைகள் ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாமக தொடர்ந்து கோரிக்கையிடுவது போல், தமிழகத்தில் உற்பத்தியாகும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு விலை நிர்ணயிக்கும் தனி அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
2021 தேர்தலின்போது, திமுக அரசு அனைத்து பயிர்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் நான்கு ஆண்டுகள் ஆனும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
விவசாயிகளை தவறான கொள்கைகள் தான் பாதிக்கின்றன. தர்பூசணி பழங்களில் சிவப்பு சாயம் உள்ளது என்ற அரசு அதிகாரியின் தவறான அறிக்கை அந்த பழத்தின் விற்பனையை குறைத்தது. தற்போது, மாம்பழ விவசாயிகள் இழப்புகளை சந்திக்கின்றனர்.
இந்நிலையில், விலை வீழ்ச்சியை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாம்பழ விவசாயிகள், வணிகர்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களை அழைத்து விலை நிர்ணயிக்க வேண்டும். ஏற்றுமதி தடைகளை அகற்ற மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.