பாமகவில் ஒற்றுமை வேண்டி சிறப்பு பூஜை: கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வேண்டுதல்
பாமக நிறுவனர் ராமதாஸும், அவரது மகனும் தற்போதைய பாமக தலைவருமான அன்புமணியும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, கட்சியில் மீண்டும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்கும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கும், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாமக சார்பில் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மாவட்டச் செயலாளர் மோகன்ராம் தலைமையிலான குழு, கோயிலை 11 முறை வலம் வந்ததோடு, வேண்டுதல் தேங்காய்களை உடைத்து தங்கள் இறைஞ்சலை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் மோகன்ராமும், ஒன்றியச் செயலாளர் சந்திரசேகரும் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
பின்னர், மாவட்டச் செயலாளர் மோகன்ராம் கூறியதாவது: “நமது நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் இணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற ஆவலுடன் இறைவனை வேண்டியுள்ளோம். அவர்கள் இருவரும் ஒற்றுமையாக செயல்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வெற்றிபெற்று தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்வில், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் சோமசுந்தரம், மகளிர் அணி மாவட்டச் செயலாளர் பாரதி, மாவட்ட தலைவர் மாதேஷ்வரி, மேற்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ், பசுமை தியாகம் மாவட்டச் செயலாளர் சேகர், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி வேலு மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.