பிளஸ் 1 வகுப்புகளில் சேர்க்கைக்காக அரசு மேல்நிலைப்பள்ளிகளை அணுகும் அனைத்து மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கையுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு இரா. முத்தரசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தற்போது பிளஸ் 1 வகுப்பில் சேர முயற்சி செய்து வருகின்றனர். இளம் தலைமுறையின் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு காலை உணவுத் திட்டம் முதல் புதுமைப் பெண் திட்டம் வரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பள்ளிநிலைக்கல்வியில் இடைநிற்றல் குறைந்து, மாணவிகள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் 241 அரசு பள்ளிகள் முழுமையான வெற்றியுடன் சாதனை படைத்துள்ளன. இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை அரசு பாராட்டியுள்ளது. ஆனால் தற்போது, பிளஸ் 1 சேர்க்கைக்காக மாணவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளை அணுகும் போது, மதிப்பெண்கள் அடிப்படையில் சிலர் நிராகரிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கும் ஒரு நிலையை உருவாக்குகிறது. இது சமூக நீதிக்கெதிரானதும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கும் விடயமாகும்.
தனியார் பள்ளிகள் அதிக லாபம் நாடி விளம்பரங்களின் மூலம் மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களை மட்டுமே சேர்க்கின்றன. இதுபோன்ற நடைமுறைகள் அரசுப் பள்ளிகளிலும் ஏற்படுமுன், அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியின் தரம் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை மேம்படுத்துவதில் தான் அமைய வேண்டும்; வெறும் தேர்ச்சி வீதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆசிரியர் திறனை மதிப்பீடு செய்வது தவறானது.
எனவே, பிளஸ் 1 சேர்க்கைக்காக அரசு மேல்நிலைப்பள்ளிகளை அணுகும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் வாய்ப்பு அளிக்க அரசு உத்தரவு வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு, தமிழ்நாடு அரசையும் பள்ளிக் கல்வித் துறையையும் வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.