பாமக தலைமை எனது மூச்சிருக்கைக்கும் எனது கட்டுப்பாட்டில்தான் – ராமதாஸ்
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேவைப்பட்டால் அன்புமணிக்கு தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என நான் முன்பு கூறினேன். ஆனால் இப்போது நடைபெறும் சூழ்நிலைகளையும், அவருடைய அணுகுமுறையையும் கவனிக்கும்போது, நான் உயிருடன் இருக்கிற வரைக்கும் அந்தப் பொறுப்பை அவருக்குக் கொடுக்க விரும்பவில்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூன் 13), விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நேற்று, 2026-இற்குப் பிறகு தலைமை பதவியை அன்புமணிக்கு ஒப்படைக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்தேன். ஆனால் தற்போது அவருடைய செயல்பாடுகள் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கும் எண்ணமே இல்லை.
நான் இந்தக் கட்சியின் நிறுவப்பணி ஆரம்பித்த நாளிலிருந்தே ஒரு நல்ல தந்தை மற்றும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறேன். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற மாநாடு மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்ட செயல்பாடுகள் எனக்கு வருத்தத்தை அளிக்கின்றன. இருப்பினும், கட்சி தளத்திலுள்ள தொண்டர்களின் உறுதியான ஆதரவு எனக்கு தொடர்ந்து கிடைத்துவருகிறது.
நேற்று நான் தலைமைப் பொறுப்பை மாற்றுவது குறித்து பேசிய பிறகு, 99 சதவீதம் தொண்டர்கள் ‘ஏன் அந்தப் பேச்சு?’ எனக் கேட்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் ‘நீங்கள் இறுதிவரை தலைமைப் பொறுப்பில் இருக்கவேண்டும்’ என்கிறார்கள். அந்த மீதமுள்ள 1 சதவீத ஆதரவை அன்புமணியின் குடும்பத்தினர் தருகிறார்கள். கட்சி தொண்டர்கள் சொல்வது போல, நான் கூட தவறுதலாகவே அந்த பதவியை மாற்றம் செய்யப்போவதாக கூறியிருக்கக் கூடாது.
எனவே, தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க, நான் உயிருடன் இருக்கும் வரைக்கும் பாமகவின் தலைமை பொறுப்பில் நீடிக்கப்போகிறேன். கட்சி உருவான போதே என் குடும்ப உறுப்பினர்கள் தலைமைக்குச் செல்ல மாட்டார்கள் என்று உறுதியளித்திருந்தேன். ஆனால் அந்த வாக்குறுதியைப் பூரணமாக நிலைநாட்ட முடியவில்லை. முன்னாள் தலைவர்கள் கோரிக்கையின் பேரில், தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்றோரின் செயல்பாடுகள் தகுதியற்றதாக இருக்கும்போது, 35 வயதில் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கியிருந்தேன்,” என்றார் ராமதாஸ்.