இஸ்ரேலின் தாக்குதலை இந்தியா கண்டிக்க வேண்டும் – திருமாவளவன்

0

இஸ்ரேலின் தாக்குதலை இந்தியா கண்டிக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும், பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்ட மோடி அரசு, இப்போதும் அதேபோன்று மௌனமாக இருப்பது தெளிவாகக் காட்டுகிறது என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய வகையில் ஈரான் மீது இஸ்ரேல் ராணுவ தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. இஸ்ரேலின் இந்த செயலை இந்திய ஒன்றிய அரசும் கண்டிக்க வேண்டியது அவசியம்.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை வீழ்த்தும் நோக்கத்தோடு, அந்த நாட்டின் முக்கியமான நகரங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் பல முக்கிய அணு விஞ்ஞானர்கள் மற்றும் ராணுவத் தலைவர்களும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நிலையில், ஈரானுக்கு அதே வலிமை கிடைக்கக் கூடாது என்ற நிலைபாடு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டித்துள்ளார். அதேபோல, ரஷ்யா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இந்தியா மட்டும் எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனமாக இருக்கிறது. இது, பாலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மோடி அரசின் தொடர்ச்சி எனவே பார்க்கப்படுகிறது.

முன்பு இந்தியா கடைப்பிடித்திருந்த சமநிலையுடைய அயலுறவுக் கொள்கையை மோடி அரசு மாற்றியதன் விளைவாக, இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது உலக நாடுகள் எதுவும் இந்தியாவுக்கு துணை நிற்கவில்லை. இஸ்ரேலை ஆதரிக்கும் மோடி அரசின் நோக்கத்தால் இந்தியா உலக அரங்கில் தனிமையடைந்தது. இப்போது மீண்டும் அதே தவறை செய்யும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படுகிறது.

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலகளாவிய அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது. இது மூன்றாவது உலகப் போரைத் தூண்டக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும், உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரப் பின்னடைவை உருவாக்கும். இந்தியாவும் அந்த பாதிப்பிலிருந்து விலக முடியாது. எனவே, இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலை கண்டிக்க இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here