விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பு: டிடிவி. தினகரன் கண்டனம்
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பயிர் நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதைத் தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கீழ் கோவை (இருகூர்) முதல் கர்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை அமைக்கப்படும் IDPL (Irugur – Devangonthi Pipeline) எண்ணெய் குழாய் திட்டம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை கடந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன், கொச்சி-கோவை-கரூர் வழியாக பதிக்கப்பட்ட குழாய் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் ஒரு பெரிய எண்ணெய் குழாயை விளைநிலங்களில் பதிப்பது அந்தப் பகுதிகளின் விவசாயிகளிடையே கடும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாய நிலங்களைத் தாண்டாமல், சாலைகளின் பக்கமாக குழாய்கள் பதிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருகின்றன. அதுமட்டுமின்றி, விவசாயிகள் அனுமதி இல்லாமல் கோவை (இருகூர்) முதல் திருப்பூர் (முத்தூர்) வரை 70 கி.மீ தூரத்தில் குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதும் முறையானது அல்ல.
எனவே, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தி, அவர்களது எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்த வேண்டும். அதேபோல், ஏற்கனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.