“பாமகில் நிலவி வரும் சிக்கல்களுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி கூறியிருப்பது ஒரு முழுமையான பொய்யானக் குற்றச்சாட்டு,” எனக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் எம்எல்ஏ அருளை சந்தித்து நலம் விசாரிக்க, ராமதாஸ் இன்று (ஜூன் 19) சென்னைக்கு வந்தார். அப்போது, பாமகச் சிக்கல்களில் திமுக தலையிடுவதாக அன்புமணி கூறியிருப்பதை பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த ராமதாஸ், “அது உண்மையற்ற, கற்பனை செய்யப்பட்ட குற்றச்சாட்டு” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
“அன்புமணி கூட்டங்கள் நடத்தும் நேரத்தில் எம்எல்ஏக்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் தற்போது மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். கட்சிப் பணிகளில் அனைவரும் தங்கள் பொறுப்புகளை மேற்கொண்டு செயலில் இருக்கின்றனர். ‘மன்னிப்பு கேட்கத் தயார்’ என்கிறார் அன்புமணி – அவர் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இது குறித்து காலப்போக்கில் தெளிவாகப் புரியும்,” எனவும் கூறினார்.
கடந்த சில மாதங்களாகவே பாமகவில், நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் அதிகாரப் பிரச்சினையில் மோதிக்கொண்டு வருகின்றனர். இந்தத் தகராறின் சூழலில், மாவட்ட வாரியாக பொதுக்குழுக் கூட்டங்களை அன்புமணி நடத்தி வருகிறார். சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், “பாமகவின் பிரச்சினைக்கு திமுகவின் தலையீடே காரணம்” என அவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.