பாமகவில் உள்ள மோதல்கள் தொடர்பாக, தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்திருக்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள பேட்டியில் ராமதாஸ் கூறியதாவது:
“திருமாவளவன் மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. அவர் இன்றும் அப்படியே இருப்பார் என்றும் நம்புகிறேன். அவர் இன்னும் திருமணம் செய்யாததற்கே நான் வருந்துகிறேன். ஆனால் அது அவருடைய சொந்த விருப்பம்.
அதிகமாக அம்பேத்கர் சிலைகள் அமைத்தது நான்தான் என்று அவர் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. ஒருமுறை தெருவில் வைக்க முடியாது என்று தடை செய்யப்பட்ட பட்டியலின மக்களின் உடலை என் தோளில் சுமந்தேன். அதற்காகவே திருமாவளவன் எனக்கு ‘தமிழ்க்குடி தாங்கி’ என்ற பட்டம் வழங்கினார். அவருடைய ஆதரவு எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக அவருக்கு மனமார நன்றி தெரிவிக்கிறேன்” என தெரிவித்தார்.
இதேவேளை, பாமக தலைவர் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே கட்சிக்கு உள்பட்ட கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இதை சமாளிக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் முயற்சியில் உள்ளனர். இன்னும் இருவருக்குமிடையே தெளிவான சமரசம் ஏற்படவில்லை.
இதற்கிடையே, திருமாவளவன் வெளியிட்ட கருத்தில்,
“எவ்வளவுதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ராமதாஸ் ஒரு மூத்த தலைவர், பெரியவர் என்பதால் அன்புமணி அவர் சொல்வதற்கேற்ப கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.