மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: அரசியலுக்கு அப்பாற்பட்டதாக ஆளுநர் கருத்து

0

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: அரசியலுக்கு அப்பாற்பட்டதாக ஆளுநர் கருத்து

மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு அரசியல் நோக்கமற்றது என்றும், முருகப்பெருமான் நமது பண்பாட்டும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிற கடவுள் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணியின் ஏற்பாட்டில், மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மாநாட்டு இடத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிக் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்காக தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடந்து, பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விடத்திற்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10.40 மணிக்கு மாநாட்டு வளாகத்தை பார்வையிட வந்தார். அவரை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் ஆளுநர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியின் மாதிரிக் கோயிலில் வழிபாடு செய்தார்.

தீபாராதனையில் கலந்து கொண்டு, பின்னர் மற்ற அறுபடை வீடுகளின் மாதிரிக் கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்தார். வெளியே வந்த அவர், திரண்டு இருந்த பக்தர்களிடம் வாழ்த்துச் சொன்னார் மற்றும் அறுபடை வீடு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முருகப்பெருமான் நமக்கெல்லாம் அடையாளமாக விளங்கும் முக்கிய கடவுள். சிவபெருமான் இந்தியாவின் முழுமையை பிரதிநிதிக்கின்றவர். உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அவர் தெய்வமாக இருக்கிறார். சிவபெருமானின் மகனாகிய முருகன் நம் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் பிரதிநிதியாக உள்ளார்.

நான் கடந்த காலங்களில் அனைத்தும் அறுபடை வீடுகளுக்கும் சென்றுள்ளேன். ஆனால் இங்கே ஒரே இடத்தில் அந்த அறுபடை வீடுகளின் தரிசனம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதனை சிறப்பாக ஒருங்கிணைத்த இந்து முன்னணிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இமயமலையின் அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நான்கு புனிதத் தலங்கள் ஒரே இடத்தில் உள்ளதைப் போலவே, இங்கே முருகனின் அறுபடை வீடுகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு பக்தர்களின் கனவை நிறைவேற்றியுள்ளது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here