தமிழகத்தில் ஆரிய கலாச்சாரத்தை திணிக்க பாஜக முயல்கிறது” – வைகோ குற்றச்சாட்டு
மத்தியில் ஆளும் பாஜக, தமிழ்நாட்டில் ஆரிய கலாச்சாரத்தை கட்டாயமாக்க முயற்சிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வைகோ கோவைக்கு சென்றார். அவரை, மதிமுக மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராஜ் மற்றும் அவைத் தலைவர் அர்ஜூன ராஜ் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
மதிமுகவின் 31-வது பொதுக்குழுவில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் தேர்தலில் அதிக தொகுதிகள் கேட்பது தொடர்பான முடிவும் அதில் வெளியாகும்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஆங்கிலம் தொடர்பான கருத்துக்களை விமர்சித்த வைகோ, பாஜக இந்தியா மற்றும் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க விரும்புவதாகவும், மொழிச் சுதந்திரத்தை மீறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
திமுகவுடன் 2017-ல் எடுக்கப்பட்ட கூட்டணி தீர்மானத்தில் மாற்றமில்லை என்றும், தற்போதைக்கு வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஆய்வுப்பொருட்கள், மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகங்களை ஒத்தவையாக இருப்பதை மத்திய அரசு ஏற்காமல் தாமதிக்கிறது. ஆரிய கலாச்சாரத்தை நிலைநாட்டும் நோக்கத்தால், கீழடி போன்ற இடங்களில் கிடைக்கும் நாகரிக சான்றுகளை நிராகரிக்க முயற்சி நடக்கிறது என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.