”முருகப்பெருமான் முதல்வர் பக்கம் இருக்கிறார்” – அமைச்சர் சேகர்பாபு

0

“ஆன்மிகம் எது, அரசியல் எது என்பதை கடவுள் கவனித்து வருகிறார். தற்போது நடைபெறும் மாநாடு முழுக்க அரசியலையே பிரதிபலிக்கிறது,” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 22) சென்னை அயனாவரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி வழியாக ரூ.97 லட்சம் மதிப்பில் குளம் சீரமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“இந்த ஆட்சி, தமிழ்க் கடவுள் முருகனின் பெருமையை உயர்த்தும் பணியில் இருக்கிறது. இதுவரை எந்த ஆட்சியிலும் அனைத்துலக முத்தமிழ் முருக பக்தர் மாநாடு நடத்தப்படவில்லை. வருகிற ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெறும் குடமுழுக்கு விழாவுக்காக ரூ.400 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாயிரம் மூத்த குடிமக்கள் கடந்த ஆண்டில் அறுபடை வீடுகளுக்குச் செல்ல அரசு ஏற்பாடு செய்ததுபோல், இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையில் மக்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு உட்பட 117 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. பெருந்திட்டத்தின் கீழ், பழனியில் ரூ.98 கோடி செலவில், திருத்தணியில் ரூ.86 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுவாமிமலையில் ரூ.5 கோடி செலவில் மின்தூக்கி அமைக்கப்படுகிறது.

அறுபடை வீடுகளும், அதற்கு அப்பாற்பட்ட 143 முருகன் கோயில்களுக்கும் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே தமிழ்க் கடவுள் முருகனின் பெருமையை உயர்த்தும் ஆட்சி இது. அவருடைய ஆசீர்வாதம் எங்கள் முதல்வருடன் இருக்கிறது.

ஆன்மிகமும் அரசியலும் வேறு என்பதை கடவுள் தெரிந்து செய்கிறார். சிலர் நடத்தும் மாநாடுகள் அரசியல் நோக்கிலானவை. ஆனால், எங்கள் செயற்பாடுகள் பக்தி சார்ந்தவை, ஆன்மிகத்தோடு கூடியவை. கடவுள் இதை தெளிவாகப் புரிந்துகொள்கிறார். போலியான நிகழ்வுகளுக்கு இறைவன் துணை நிற்பதில்லை.

முருக பக்தர்களும், ஆன்மிகத்தை நேசிக்கும் மக்கள் அனைவரும் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு, இந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.1,060 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. முருகன் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தம் ஆட்சிக் காலமான 10 ஆண்டுகளில் இந்தத் துறைக்கு எவ்வளவு நிதியுதவி செய்தார் என்பதை அவரிடம் கேட்டுத் தெரியப்படுத்துங்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு பணிகளை அந்த மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி கனிமொழி, நானும், அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறோம். கடந்த இரண்டு நாட்களாக ஆய்வுக் கூட்டம் நடத்தி பணிகள் விரைவாக நடைபெற ஏற்பாடு செய்துள்ளோம். வரும் 27ம் தேதிக்குள் மேலும் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெறும். குடமுழுக்குக்கு வருவோருக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும்,” என்றார் சேகர்பாபு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here