“தொகுதிகள் தரப்படாவிட்டாலும் கூட்டணியை விட்டு செல்ல மாட்டோம் – துரை வைகோ”
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் மற்றும் எம்.பி துரை வைகோ கூறியதாவது:
ஜூன் 22-ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், மண்டல வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பார்கள். பதவிக்கு ஆசை இல்லாமல் பணியாற்றுபவர்கள் தான் உண்மையான மதிமுகவினர் என அவர் கூறினார். “நான் மத்திய அமைச்சராகும் சூழ்நிலை தற்போது இல்லை. எதிர்காலம் குறித்து எதையும் முன்கூட்டியே சொல்ல முடியாது,” என்றும் அவர் தெரிவித்தார்.
“ஒரே கருத்துடன் இருப்பது அவசியமல்ல, ஆனால் ஒரு பொதுநோக்குடன் நாம் கூட்டணியில் இணைந்துள்ளோம். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 12 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே மதிமுகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எனவே, அதிக தொகுதிகளை கோருவது இயல்பானது. ஆனால், அதற்காக கூட்டணியின் ஒருமைப்பாட்டை பாதிக்கக்கூடாது என்பதையும் மனதில் வைத்திருக்கிறோம். தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும், திமுக கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம். அதே நேரத்தில், குறைந்தபட்ச சுயமரியாதை உறுதி செய்யப்பட வேண்டும்,” என்றார் அவர்.
மேலும், “நாங்கள் கூட்டணியை விட்டு விலகும் எண்ணம் எங்களிடம் இல்லை. எங்களுடன் பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. அத்தகைய யோசனை கூட எங்களிடம் இல்லை. ஆட்சியில் பங்கு பெறுவது நல்லது தான், ஆனால் அது குழப்பங்களையும் ஏற்படுத்தும். வைகோவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கான முடிவை அவரே எடுப்பார்,” என்றார் துரை வைகோ.
“முருகனை வழிபட விரும்பினால், அறுபடை வீடுகளில் உள்ள கோயில்களில் ஏதாவது ஒன்றிற்குச் சென்று வழிபடுவேன்; ஆனால் ‘செட்டிங்’ போட்ட இடத்திற்குச் சென்று வழிபட தேவையில்லை,” என்றும் அவர் சாடியார். மேலும், “வாரிசு அரசியல் திராவிடக் கட்சிகளில் மட்டுமல்ல; நாட்டின் பல்வேறு பகுதிகளில், பாஜகவிலும் உட்பட, வாரிசுகள் தான் நிலைபெற்றுள்ளனர்,” என்றார்.