தமிழகம் போதைப் பொருள் விற்பனையின் முக்கிய மையமாக மாறி வருகிறது: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

0

தமிழகம் போதைப் பொருள் விற்பனையின் முக்கிய மையமாக மாறி வருகிறது: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தருமபுரி: தமிழக அரசு, போதைப் பொருட்களின் பரவலை தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாமல், அமைதியாக இருக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இன்று (ஜூன் 25) தருமபுரியில் நடைபெற்ற அமமுக மாவட்ட செயல்வீரர் மற்றும் செயல் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போது, “திருப்பூரில் இன்று இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை, கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் உயிர் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். மாநிலத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் தளர்ந்துள்ளது. மக்கள் தற்போது தங்களின் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர்,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது: “தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை சிறப்பான சந்தையாக உருவாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் செயலற்ற நிலையில் இருக்கிறது. தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேறவில்லை. இதனால், மக்கள் தங்கள் உரிமைகளை கோரி சாலையில் இறங்கும் நிலை உருவாகியுள்ளது.

மற்றொரு பிரச்சினையாக, தமிழகத்தில் மாம்பழ உற்பத்தியாளர்கள் சரியான விலை பெறாமல் தவிக்கின்றனர். பலர் மா மரங்களை வெட்டி, வேறு பயிர்களுக்கு மாறி வருகின்றனர். ஆனால், தற்போது தான் முதல்வர் ஸ்டாலின் மா விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ எனும் பழமொழியை நினைவூட்டுகிறது,” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.ஆர். முருகன், மாவட்டச் செயலாளர் டி.கே. ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ செல்வம், தொழில்நுட்ப அணி நிர்வாகி பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here