ஜூலை 9-ல் புதுச்சேரியில் பந்த் போராட்டம் – அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் தீர்மானம்
மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பின்பேரில், நாடு முழுவதும் ஜூலை 9-ம் தேதி நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்தில், புதுச்சேரியிலும் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டமிடல் கூட்டம் இன்று (ஜூன் 17) முதலியார்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டு 21 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமானவை:
- புதிய தொழிலாளர் சட்டங்களை வாபஸ் பெறுதல்
- அமைப்புசாரா, ஒப்பந்த மற்றும் திட்டதிட்ட வேலைநிறைவேற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 நிர்ணயம்
- ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்
- அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்கல் மற்றும் சமூக பாதுகாப்பு உறுதி
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருதல்
- போனஸ், பிஎஃப், பணிக்கொடை ஆகியவற்றின் உச்சவரம்புகளை நீக்கி, பணிக்கொடை தொகையை உயர்த்தல்
- விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தல், உணவு, மருந்து மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு ஜிஎஸ்டி நீக்கம்
- பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான மத்திய வரிகளை குறைத்தல்
- பொது விநியோகத் திட்டத்தை பரவலாக்கி உணவு பாதுகாப்பு உறுதி
- மின்சாரத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுதல், தனியார் மயமாக்கலையும் ஸ்மார்ட் மீட்டர்களையும் கைவிடுதல்
- கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்டவை அனைவருக்கும் அடிப்படை உரிமையாகக் கருதப்பட வேண்டும்
- புதிய கல்விக் கொள்கையை வாபஸ் பெறுதல்
இப்போராட்டத்துக்கு பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடம் ஆதரவு பெறும் வகையில், கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது:
- ஜூன் 23, 24, 25 – நிறுவனங்களுக்கு ஆதரவு கோரி கடித வழங்கல்
- ஜூன் 30 மற்றும் ஜூலை 1 – தெருமுனை பிரச்சாரம்
- ஜூலை 3, 4, 5 – வாகனங்களில் பிரச்சாரம் செய்து பந்த் போராட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தல்
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமையிலான குழுவில், மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா, மாநில கவுரவத் தலைவர் அபிஷேகம் மற்றும் சிஐடியு, ஐஎன்டியுசி, எல்பிஎப், ஏஐசிசிடியு உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.