புதுச்சேரியில் மதுபான விலை உயர்வால் விற்பனை சரிவு – விற்பனையாளர்கள் கவலை
புதுச்சேரியில் மதுபான விலைகள் உயர்ந்ததால், கடந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மது விற்பனை 25 சதவீதம் வரை குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்பு, புதுச்சேரியில் மதுபான விலை மற்ற மாநிலங்களைவிட குறைவாக இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் இங்கு வந்தனர். இச்சூழலில், நகர பகுதிகளில் அழகாக வடிவமைக்கப்பட்ட பெரிய மதுக்கடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த மதுவிற்பனையின் மூலம் புதுவை அரசின் கலால் துறைக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,000 கோடி வருவாய் கிடைத்து வந்தது.
ஆனால், சமீபத்தில் வருவாயை அதிகரிக்க புதுச்சேரி கலால் துறை மதுபான விலைகளை முற்றிலும் புதிய அளவுக்கு உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் விளைவாக, கீழ்தர வகை மதுபானங்கள் கூட ஒரு குவார்ட்டருக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளன. அதிகமாக விற்பனையாகும் பிராண்டுகளின் விலை ரூ.30 வரை உயர்ந்துள்ளது. அரசு இந்த விலை உயர்வு விற்பனையை பாதிக்காது என கருதினாலும், நடைமுறையில் எதிர்பாராத பாதிப்புகள் உருவாகியுள்ளன.
விற்பனையாளர்கள் கூறுகையில், “கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மதுபான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மதுவை வாங்க தயங்குகிறார்கள். அரசு விதிக்கும் கட்டணத்துடன் சேர்த்து, உரிமக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த மூன்று நாட்களில் விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், கலால் துறையின் வருவாயில் பெரிய வீழ்ச்சி ஏற்படும்,” என அவர்கள் எச்சரிக்கின்றனர்.