டி20 உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணி பார்படாஸில் இருந்து தாயகம் திரும்ப இருந்த நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘பெரில்’ புயல் காரணமாக பயணம் தாமதமானது.
புயல் கரையை கடந்த பிறகு, பார்படாஸில் இருந்து சிறப்பு விமானத்தில் இந்திய அணி புறப்பட்டது. இந்த விமானம் இன்று காலை டெல்லி சென்றடைந்தது. அப்போது விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து ஐடிசி மவுரியா ஹோட்டலுக்குச் சென்ற இந்திய வீரர்கள் உலகக் கோப்பையுடன் உற்சாகமாக நடனமாடினர்.
காலை 11 மணியளவில் இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மும்பை செல்லும் இந்திய அணி கோப்பையுடன் திறந்தவெளி பேருந்தில் நாரிமன் பாயிண்டில் இருந்து மரைன் டிரைவ் வரை ஊர்வலமாகச் செல்லும். பின்னர், மாலை வான்கடே மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.