பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

0

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில்நெட்வொர்க்கை நீட்டிக்கும் முயற்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

116.1 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த திட்டத்தின் பகுதிகளான மாதவரம் – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் தற்போது பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை 2028-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யும் நோக்கத்துடன் சென்னை மெட்ரோ நிறுவனம் செயற்படுகிறது.

இந்த இடையே, பரந்தூரில் உருவாகவுள்ள புதிய விமான நிலையத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பூந்தமல்லி – பரந்தூர் வரை 53 கிமீ நீளமுள்ள மெட்ரோ பாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை கடந்த மார்ச் 12ஆம் தேதி மாநில அரசிடம் மெட்ரோ நிறுவனம் சமர்ப்பித்தது.

அதற்கு தற்போது அரசு ஒப்புதல் அளித்து, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆரம்ப கட்டமாக, பூந்தமல்லி முதல் சுங்கவார்சத்திரம் வரை 27.9 கிமீ தூரத்திற்கு ரூ.8,779 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இது குறித்து மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்ததாவது: “சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டங்களை தொடர்ந்து, விமான நிலையம் – கிளாம்பாக்கம், பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி ஆகிய வழித்தடங்களிலும் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும்.

மெட்ரோ ரயில்களின் சேவை விரிவாவதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் இதைப் பயன்படுத்துவார்கள். இது, சென்னை நகரத்தின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரும் தூணாக அமையும்,” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here