உள்ளூர் மக்களிடமிருந்து அகஸ்தியர் கோயிலும், சொரிமுத்து அய்யனார் கோயிலும் செல்லும் போது கட்டணம் வசூலிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் புகழ்பெற்ற அகஸ்தியர் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயிலுக்கருகே அகஸ்தியர் அருவியும் அமைந்துள்ளது.
இந்த அருவியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் வந்து குளிக்கின்றனர். இங்கு குளிப்பதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் வனத்துறை கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், இந்த வசூலிப்பு உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டியது. எனவே வனத்துறையால் வசூலிக்கப்படுவது சட்டவிரோதம்.
மேலும், இப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களிடமிருந்தும் கட்டணம் வசூலிக்கப்படுவது சட்டத்திற்கு விரோதமானது. எனவே உள்ளூர் மக்களிடமிருந்து கட்டணம் பெறுவதைத் தடை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு மற்றும் எஸ். ஸ்ரீமதி ஆகியோர் கொண்ட அமர்வு ஜூன் 3-ம் தேதி விசாரித்தது. விசாரணை முடிவில், அகஸ்தியர் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயில்களுக்குச் செல்லும் உள்ளூர் மக்களிடமிருந்து எந்தவிதமான கட்டணமும் பெறக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.