மே மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாததை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 5000-க்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழக்கமாக மாத இறுதிக் நாளில் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதுவரை (ஜூன் 4) மே மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 4) காலை 11.30 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மனோகர் மற்றும் ரவி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அப்போது, தமிழக அரசையும் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் எதிர்த்து, ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர், அவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரான அருள்செல்வியை சந்தித்து, சம்பள விஷயத்தில் புகார் தெரிவித்தனர்.