குன்னூரில் உள்ள வெலிங்டன் எம்ஆர்சி ராணுவ பயிற்சி மையத்தில், அக்னிவீர் படை பிரிவை சேர்ந்த 551 ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நிகழ்வில் சத்தியப் பிரமாணம் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் அருகே அமைந்துள்ள வெலிங்டனில், இந்திய ராணுவத்தின் மிகப் பழமையான மற்றும் சிறப்புமிக்க காலாட் படை பிரிவான மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில் அக்னிவீர்களுக்கு தகுதியான பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது, ஐந்தாவது படை பிரிவை சேர்ந்த அக்னிவீரர்கள், 31 வாரங்கள் நீண்ட பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இன்று வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் உள்ள ஸ்ரீ நாகேஷ் சதுக்கத்தில், சத்தியப் பிரமாண நிகழ்ச்சி நடந்தது.
பயிற்சி பெற்ற ஒவ்வொரு ராணுவ வீரருக்கும், ஒழுக்கம், தொழில்முறை ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு ஆகிய முக்கிய பண்புகள் பதியுமாறு தகுந்த பயிற்சி வழங்கப்பட்டது. கர்நாடகா-கேரளா ராணுவப் பிராந்தியத்தின் கமாண்டிங் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் வி.டி.மேத்யூ மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தின் கமாண்டர் கிருஷ்ணேந்து தாஸ் ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து, 551 அக்னிவீரர்கள், உப்பை அருந்தியபின் பகவத்கீதை, பைபிள், குரான் மற்றும் தேசியக் கொடியை சாட்சியாகக் கொண்டு சத்தியம் செய்தனர். பயிற்சியில் சிறந்த முன்னேற்றம் காட்டிய அக்னிவீரர்களுக்கு, மேஜர் ஜெனரல் வி.டி.மேத்யூ பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கினார். இவர்கள் தற்போது நாட்டின் எல்லைப் பகுதிகளில் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர். இவ்விழாவில், வீரர்களின் பெற்றோர், ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற செய்தியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.