திண்டுக்கல் அருகிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை இரண்டு வாரங்களுக்குள் அகற்ற உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், மது விலக்கை நடைமுறைப்படுத்தும் நோக்கில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க மாநில அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், திண்டுக்கல் – திருச்சி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடை, பள்ளிகள், கோவில்கள் போன்ற முக்கியமான பகுதிகளுக்கு அருகிலிருப்பதால், மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, அந்த கடையை மூட வேண்டும் என கேட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் பரிசீலனை செய்தனர். இதற்கு பதிலளித்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர், அந்த கடை வணிகப் பகுதியிலுள்ளதால், தூரக்கட்டுப்பாட்டு விதிகள் பொருந்தாது என பதிலளித்தார்.
இந்த விவகாரத்தில், “அந்த மதுக் கடை அப்பகுதி மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் என்பது மாற்றமற்ற உண்மை. மக்கள் பொதுவாக பாதிக்கப்படாமல் இருக்க மாநில அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது மாநில அரசின் முக்கிய பொறுப்பாக இருக்கிறது.
அதே நேரத்தில், போதைப்பொருள் கலந்த பானங்கள் மற்றும் சுகாதாரத்துக்கு தீங்கான மருந்துகளின் பயன்பாட்டை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புதிய டாஸ்மாக் கடைகளை தொடங்கும் நடவடிக்கைக்கு பதிலாக, மது விலக்கை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது,” என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை இரு வாரங்களில் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.