தஞ்சாவூரில் இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 15ஆம் தேதி தஞ்சாவூரில் பொதுமக்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து உரையாடவுள்ளார். அதன் பின்னர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
அடுத்து, 16ஆம் தேதி சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெறும் சிறப்பு விழாவில், 1.5 லட்சத்துக்கும் அதிகமான நலத்திட்ட பயனாளிகளுக்கு உதவித் தொகைகள் வழங்கப்படவுள்ளன என்றார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் தண்ணீரை திறந்துவிட்டதால், டெல்டா மாவட்டங்களில் விதை நெல் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இவை எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லாமல் பெறப்படுவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தண்ணீர் எல்லா நிலங்களுக்கும், கடைமட்ட பசுமை நிலங்களுக்கு வரை செல்லும் வகையில், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் நாள் குறித்து அரசால் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறினார்.
ராகிங் நிகழ்வுகளை தடுக்கும் நோக்கில், கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள், மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர், மாணவர்கள் கல்லூரிக்கு வருவதிலிருந்து வீட்டிற்குச் செல்லும் வரை அவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.
மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.