டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் விசாரணை: அமலாக்கத்துறையிடம் விளக்கம் கோரிய உயர் நீதிமன்றம்
ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான டாஸ்மாக் ஊழல் சம்பவத்தில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, பின்னர் சீல் வைத்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆகாஷ் பாஸ்கரனின் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அவரது கிளையன்ட் முறைகேட்டில் சம்பந்தமற்றவர் என்றும், அவரது செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்ததாகவும் விளக்கினார்.
விக்ரம் ரவீந்திரனின் சார்பில் வழக்கறிஞர்கள் வி.கிரி மற்றும் அபுடுகுமார் ராஜரத்தினம், அவர் டாஸ்மாக் நிறுவனத்துடன் தொடர்பில்லாதவர் என்றும், வீடு அலுவலகம் சீல் வைக்கப்படுவது சட்டவிரோதம் எனவும் வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சீல் வைக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளதா? சோதனை மட்டும் நடத்த இயலும்; வீடுகள் அல்லது அலுவலகங்களை சீல் வைக்கும் நடவடிக்கையின் சட்டப்பூர்வ அடிப்படை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறையின் சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் பதிலளிக்கையில், சோதனை நேரத்தில் வீடு மற்றும் அலுவலகம் பூட்டிய நிலையில் இருந்ததால் சீல் வைக்கப்பட்டது என்றும், நோட்டீஸ் ஒட்டியதையும், குறித்த நபர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்ததை நினைவூட்டினார்.
நீதிபதிகள், “பொதுவாக, சோதனையில் தொடர்புடைய நபர் இல்லையென்றால், காவல்துறையின் உதவியுடன் கதவை திறந்து சோதனை நடத்தலாம். ஆனால் சீல் வைக்க முடியும் எனும் சட்ட அடிப்படை என்ன?” என்று மேலும் வினவினர்.
இதற்கு உரிய பதிலை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரித்து, விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.