ஆந்திர எல்லையில் மாங்காய் லோடுகள் தடுத்து நிறுத்தம் – பரதராமியில் விவசாயிகள் சாலை மறியல்!

0

ஆந்திர எல்லையில் மாங்காய் லோடுகள் தடுத்து நிறுத்தம் – பரதராமியில் விவசாயிகள் சாலை மறியல்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மா (மாம்பழ) விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில், பெருமளவில் பெங்களூரா வகை மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மாங்காய்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பழச்சாறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 90 சதவீதம் மா விவசாயிகள், ஆந்திர மாநில தொழிற்சாலைகளையே நம்பியுள்ள நிலையில், சமீப காலமாக ஆந்திரத்தில் மாங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அங்குள்ள தொழிற்சாலைகள் தமிழக விவசாயிகளிடமிருந்து மாங்காய்களை வாங்க மறுக்கின்றன.

இதனால், மாங்காய் ஏற்றிய வாகனங்களை ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்படுவது விவசாயிகளில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து, வெள்ளிக்கிழமை பரதராமி எல்லையில் விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை பரதராமி காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றதும், விவசாயிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

பின்னர், காவல் துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் விவசாயிகள், “ஆந்திரத்தில் போல், தமிழகத்திலும் மா விளைச்சலுக்கு அரசு விலை நிர்ணயித்து மானியம் வழங்க வேண்டும். மேலும், தமிழக மாங்காய்களை வாங்க ஆந்திர அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், விவசாயிகள் போராட்டத்தை முடித்து நிலைமை அமைதியானது. ஆனால், பரதராமி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here