மாணவர்களிடம் பள்ளி காலத்திலேயே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து, கல்வி மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுவதற்காக மதுரை கலைஞர் நூலகத்தில் உள்ள அனைத்து வகை புத்தகங்களையும் 38 மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் படிக்க இயலும் வகையில் ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில், மதுரை புது நத்தம் சாலையில் தமிழ்நாடு அரசு மிக பிரம்மாண்டமாகக் கட்டிய கலைஞர் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நூலகத்தை இதுவரை 18.5 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த நூலகத்தில் உள்ள அனைத்துவகை புத்தகங்களையும் அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக பயன்படுத்தக்கூடிய வகையில், கல்வி நிறுவனங்களை உறுப்பினர்களாக இணைக்கும் புதிய திட்டத்தை கலைஞர் நூலகம் துவக்கியுள்ளது. இதன்படி, மாநகராட்சி ஆணையர் சித்ரா, மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள 38 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை திட்டத்தில் இணைத்து, மாணவர்கள் நேரில் நூலகம் செல்லாமல் பள்ளியில் இருந்தபடியே புத்தகங்களைப் பெறும் வகையில் ஒப்பந்தம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கலைஞர் நூலக அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளும், தலைமையாசிரியர் மூலமாக, ஒரு நேரத்தில் 25 புத்தகங்களைப் பெற முடியும். அவற்றைப் படித்த பின் நூலகத்திற்கு திருப்பி ஒப்படைத்து, புதிய புத்தகங்களை மீண்டும் வாங்கிக் கொள்ளலாம். கல்வி, அறிவியல், வரலாறு, இலக்கியம், சமூக அறிவியல் போன்ற பல்வேறு துறைகளுக்கான புத்தகங்களை இலவசமாக வாசிக்கலாம்.
மேலும், வாசித்த புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை நூலகத்தில் நடக்கும் வாசிப்பு நிகழ்ச்சிகளில் பகிரலாம். படித்த கதைகளைக் கூற ஆசைப்படும் மாணவர்கள் வாசகர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
ப்ளஸ்-1 மற்றும் ப்ளஸ்-2 மாணவர்கள் இ-நூலகம் பற்றியும் அறிந்துகொள்ள விரும்பினால், அதைப் பற்றிய பயிற்சியும் வழங்கப்படும். இ-நூலகத்தின் மூலம் ஆன்லைனில் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் முறையும் தெரியப்படுத்தப்படும்.
திறமை வாய்ந்த மாணவர்கள் – வாசிப்பு, பேச்சு, நாடகம், நடனம் போன்ற திறன்களில் நிபுணரானவர்கள் – கலைஞர் நூலக நிகழ்ச்சிகளில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பு பெறுவர். நூலகத்தில் நடைபெறும் அனைத்துச் செயல்களில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில், இந்த ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தனர்.