தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என கூறிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சென்னையில் அமைந்துள்ள அரசு நிதியுதவி பெறும் தனியார் மகளிர் கல்லூரியில், தமிழ் மொழியில் கல்வி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாத நிலையில் நியமிக்கப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்களின் நியமனங்களை நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு வழங்கியுள்ளது.
சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் காலியாக இருந்த 64 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நியமனங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தமிழ் வழி கல்வி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கூறி, 5 பேராசிரியர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக கல்லூரி கல்வி இயக்குநரகம் மறுத்தது. இதனை எதிர்த்து மகேஸ்வரி, மேனகா உள்ளிட்ட ஐந்து பேராசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி. குமரப்பன் அவர்களின் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், “நியமனத்திற்கான அறிவிப்பில் தமிழ் வழிக்கல்வி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதுபற்றி எதும் குறிப்பிடப்படவில்லை. 2021ல் நியமனம் செய்யப்பட்ட பின்னர், மூன்று ஆண்டுகள் கடந்த பிறகு ஒப்புதல் மறுக்கப்பட்ட உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து ஒப்புதல் வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், “தகுதி மற்றும் முன்னுரிமைக்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இந்த வழக்கை தாக்கல் செய்யும் உரிமை கல்லூரிக்கு மட்டுமே உண்டு. நியமிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர முடியாது” என்றார்.
இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி, நியமனம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.