தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய பகுதிகளின் மீது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் ஜூன் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஜூன் 18 முதல் 20ஆம் தேதி வரை சில இடங்களில் மழை தொடரும்.
இன்று, நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருநெல்வேலி மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல் ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (ஜூன் 14) கோவை, நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். தருமபுரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடைவேளைகளில் 65 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசும். வடதமிழக கடலோரப் பகுதிகளிலும் 40–50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளில் கடலில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய மழை அளவுகள்:
நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்ச மழை நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் மற்றும் அவலாஞ்சியில் 7 செ.மீ. பதிவாகியுள்ளது. விண்ட் வொர்த் எஸ்டேட்டில் 6 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, சோலையாறு, நீலகிரியின் தேவாலா மற்றும் மேல் பவானி, தென்காசியின் குண்டாறு அணை, கன்யாகுமரியின் சிற்றாறு, அடையாமடை, திற்பரப்பு, குழித்துறை ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.