யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் கணைய அழற்சி குறையும் என ஆய்வு தெரிவிக்கிறது
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள், கணைய அழற்சி மற்றும் அதனுடன் ஏற்படும் கட்டி (நீர்க்கட்டி) பாதிப்புகளை படிப்படியாக குறைக்கக் கூடியவை என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர் ஒய். தீபா தலைமையிலான மருத்துவக் குழுவினரால் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. ஆய்வில் மருத்துவ ஆய்வாளர்களான ஏ. விஜய், கே. பத்மாவதி, ஆர். நித்யஸ்ரீ மற்றும் மூவேந்தன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
அந்த ஆய்வில் தெரிவிக்கப்படுவதாவது:
கணைய அழற்சி என்பது, கணையம் பாதிப்படைவதன் காரணமாக உண்டாகும் வீக்கம் அல்லது பாதிப்பு. இது நீடித்துவிட்டால் கணையத்தின் உள் சுரப்பி (அகச்சுரப்பி) மற்றும் வெளிச்சுரப்பி (புறச்சுரப்பி) செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில், இந்த அழற்சி சூடோசிஸ்ட் எனப்படும் நீர்க்கட்டிகளை உருவாக்கும்.
உலகளவில், லட்சம் மக்களில் 163 பேர் வரை இந்த அழற்சியால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40% பேர் நாள்பட்ட அழற்சியாலும், 26% பேர் தற்காலிக அழற்சியாலும் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
அத்தகைய ஒரு நிலையில், 23 வயதுடைய பெண் ஒருவர் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடும் வயிற்று வலி, மலம் கழிக்க வல்லாமை, கால்களில் எரிச்சல் மற்றும் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தன. பரிசோதனையில், அவருக்கு தீவிர கணைய அழற்சி மற்றும் பெரிய அளவிலான நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பவனமுக்தாசனா, வக்ராசனா போன்ற 7 வகையான யோகாசனங்கள், பிராணாயாமம் மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் 20 நாட்கள் வழங்கப்பட்டன. இந்த சிகிச்சையின் முடிவில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் அவரது கணையக் கட்டி மற்றும் அழற்சி கணிசமாக குறைந்திருப்பது உறுதியாகியிருந்தது.
இந்த ஆய்வு ஒரு நோயாளியின் சிகிச்சை மற்றும் பதிலளிப்பை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. எனவே, இது போன்ற முடிவுகளை பொதுவாக நிரூபிக்க, விரிவான மற்றும் கூடுதல் ஆய்வுகள் தேவையெனவும் அந்த ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.