குடியரசு துணைத் தலைவர் புதுச்சேரி வருகை: ஆளுநர், முதல்வர் வரவேற்பு

0

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மூன்று நாள் அரசுப் பயணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் புதுச்சேரிக்கு வந்தடைந்தார். அவரை ஆளுநரும், முதல்வரும் வரவேற்றனர்.

டெல்லியில் இருந்து புறப்பட்ட ஜெகதீப் தன்கர், நேற்று மதியம் லாஸ்பேட்டை விமான நிலையம் மூலமாக புதுச்சேரி வந்தார். அவரை துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட பலர் வரவேற்றனர்.

தனது சுற்றுப்பயணத்தின் போது, கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நாளை மாலை 4 மணி முதல் 5 மணி வரை, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்ற உள்ளார். அதன் பின்னர், ஜிப்மரில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த “தாயாரின் பெயரில் ஒரு மரக்கன்று” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, துணைத் தலைவர் தனது தாயார் கேசரி தேவியின் பெயரில் ஒரு மரக்கன்றை நட்டுப் போற்ற உள்ளார். இந்நிகழ்வின் முடிவில், அவர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு திரும்புவார்.

அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை காலை, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், புதுச்சேரி விமான நிலையம் வந்துகொண்டு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அதையடுத்து டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் வருகையால், புதுச்சேரி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here