பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது

0

பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் (இதுல் அதா) திருநாளை தமிழகம் முழுவதும் நேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன. இந்த தொழுகைகளில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள், தங்களது இறை நம்பிக்கையை வெளிப்படுத்தி, தியாகத்தின் சின்னமான குர்பானி வழங்கினர்.

பக்ரீத் என்பது துல்ஹிஜ்ஜா மாதம் 10ம் தேதியன்று கொண்டாடப்படும் இஸ்லாமியர்களின் புனித நாளாகும். இறைவனின் கட்டளையை அனுசரிக்க தனது மகனை பலியிடத் தயார் ஆன இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஆண்டுதோறும் இந்த பண்டிகை நடைப்பெறுகிறது. இது தியாகம், இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுசெல்லும் திருநாளாகும்.

நேற்று நாடு முழுவதும் இந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். தமிழகம் முழுவதும் முக்கிய மசூதிகள் மற்றும் திறந்த வெளி இடங்களில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடையுடன் சேர்ந்து சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகைக்குப் பின், அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவி, பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். நாட்டில் அமைதி நிலவ வேண்டும், ஒற்றுமையுடன் மக்கள் வாழ வேண்டும் என இஸ்லாமியர்கள் இறைவனை பிரார்த்தித்தனர்.

தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நோக்கில், ஏழை எளிய மக்களுக்கு குர்பானி இறைச்சி வழங்கப்பட்டது. சில இடங்களில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி பகிரப்பட்டது.

பக்ரீத் பண்டிகையையொட்டி தவெக தலைவர் நடிகர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில், “உன்னத தியாகத்தைக் கொண்டாடும் இந்நன்னாளில், அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இந்த நாளில் சமத்துவம், சகோதரத்துவம், சமய நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சி நிலைத்து வளர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

சென்னையில் திருவல்லிக்கேணி பெரிய மசூதி, பாரிமுனை, எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகம், தீவுத்திடல், பெரியமேடு, ஆயிரம் விளக்கு, ஐஸ்ஹவுஸ், மண்ணடி, மயிலாப்பூர், முகப்பேர், வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் சிறுவர் முதல் பெரியவர் வரை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மக்கள் தொகை அதிகமாகக் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here