தேனியில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பங்கேற்று திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்.
இன்று காலை, தேனி ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை முதல்வர் தலைமை வகித்து, முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்தும் திட்ட செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் ஐ. பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், அரசு சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் செயலாளர் ஷஜீவனா, எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதி எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன. பின்னர், ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் ஒன்பது புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்படத் தொடங்கின. மேலும், தேனி – பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தேனி மக்களவைத் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மாலை நேரத்தில், மதுராபுரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட திமுக அணிகள் நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளார்.