பில்லூர் அணை நிரம்பியது – பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததனால், பில்லூர் அணை நிரம்பியுள்ளது. அணையின் மேலதிக நீர் தற்போது மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு அருகிலுள்ள பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. இந்த அணையும் பவானி ஆற்றையும் மையமாகக் கொண்டு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு நீர்விநியோகம் செய்யும் 10-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கேரளா மற்றும் நீலகிரி மலைகளில் உள்ள காடுகள் பில்லூர் அணைக்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளன. அணையின் முழு கொள்ளளவு 100 அடி ஆகும். நீர்மட்டம் 97.5 அடியை எட்டும்போது, அது நிரம்பியதாக கருதப்படும்.
இந்த நிலையில், அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு, பவானி ஆற்றுக்குள் நீர் திறக்கப்பட்டது. இதற்கிடையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு வழங்கியது. அதேபோல், பில்லூர் அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்றும் கனமழை தொடர்கிறது. நேற்று வரை 82 அடி மட்டத்தில் இருந்த அணையின் நீர்மட்டம், இன்று அதிகாலை 95 அடியாக உயர்ந்தது.
முழு கொள்ளளவை அணை எட்டியதால், அதிகாலை நேரத்தில் 4 மதகுகளும் திறக்கப்பட்டன. அதன் வாயிலாக பவானி ஆற்றில் விநாடிக்கு 14,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த பருவமழைக்காலத்தில் கடந்த மாதம் ஒரு முறை அணை நிரம்பியது. தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.