டாஸ்மாக் முறைகேடு விவகாரம் – ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

0

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் – ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு இடையே உள்ள இணைப்புகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நாளை (ஜூன் 18) தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

₹1,000 கோடி மதிப்பிலான டாஸ்மாக் முறைகேடு வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சோதனை முடிவில் விக்ரம் ரவீந்திரனின் சொத்துகள் சீலிடப்பட்டன. இதனையடுத்து, இந்த நடவடிக்கைக்கு எதிராக இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவில், சீலை அகற்றவும், அமலாக்கத் துறையின் நடவடிக்கையை நிறுத்தவும் கோரியுள்ளனர்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறையின் சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், இருவரும் விசாரணைக்கு எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது தொடர்பான தகவல்களை சீலிட்டக் கவரில் தாக்கல் செய்தார். ஆனால் அந்தக் குறிப்புகள் போதுமானவை அல்ல என்று நீதிபதிகள் கருதி, மேலும் ஆதாரங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், “வீடுகளை சீல் வைக்கும் அதிகாரம் இல்லாத அமலாக்கத் துறை எப்படி சீல் வைத்தது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை வழக்கறிஞர், வீடுகள் சீல் வைக்கப்படவில்லை, கதவை திறக்க வேண்டாம் என நோட்டீஸ் மட்டும் ஒட்டப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதற்கு நீதிபதிகள், “அப்படி என்றால் அந்த நோட்டீஸின் அர்த்தம் என்ன? வீடு செல்வதற்கே அனுமதி தேவைப்படுகிறதா?” என்று சந்தேகம் எழுப்பினர். பின்னர், அந்த நோட்டீஸ் அகற்றப்படும் என அமலாக்கத் துறை தெரிவித்தது.

இதில், ஆகாஷ் பாஸ்கரனின் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “2014 முதல் 2021 வரை நடந்த முறைகேடு வழக்கில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அந்நேரத்தில் அவர் பள்ளியில் படித்து வந்தவர்” என்று வாதிட்டார்.

வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிபதிகள், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு முறைகேடு தொடர்பாக தொடர்புகள் உள்ளதா என்பதை உறுதிசெய்யும் ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவு வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here