டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிரான ஆதாரங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் ரூ.1,000 கோடி வரை நிதி முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தொடர்புடையவர்கள் எனக் கூறி, அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சீல் அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறையின் சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், தாஸ் மாக் வழக்கில் விசாரணை மற்றும் சோதனைகள் எந்த காரணங்களால் நடைபெற்றன என்பதைப் பற்றிய தகவல்களை வழங்கினார். ஆனால், அந்த விளக்கங்கள் போதுமானவை அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், “வீட்டுக்கு சீல் வைக்க எந்த சட்ட அதிகாரம் உங்களிடம் இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்கள்.
அமலாக்கத் துறை தரப்பில், “சீல் வைக்கவில்லை, கதவை திறக்க வேண்டாம் என ஒரு நோட்டீஸ் மட்டும் ஒட்டப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள், “இந்த நோட்டீஸ் மூலம் வீட்டுக்குள் நுழைவதற்கும் அனுமதி பெற வேண்டுமா?” எனக் கேட்டனர். இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் என்.ரமேஷ், அந்த நோட்டீஸ் நீக்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது மனுதாரரின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “2014 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் சோதனை நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த காலத்தில் ஆகாஷ் பாஸ்கரன் கல்வி பயின்றுகொண்டிருந்தார்” என்றார். இதனை எடுத்துக்காட்டிய நீதிபதிகள், “மனுதாரர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற ஆதாரங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவு அளிக்கப்படுகிறது” என்று கூறி, விசாரணையை ஒத்திவைத்தனர்.