பொதுமக்கள் பாஸ்போர்ட் சேவைகளை எளிதில் பெற, சென்னையில் நடமாடும் பாஸ்போர்ட் வேன் சேவை தொடக்கம்
பொதுமக்கள், குறிப்பாக தொலைதூரம் மற்றும் வசதியின்மையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும்வர்கள், பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக பெறும் வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் ‘பாஸ்போர்ட் நடமாடும் வேன்’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையை, பாஸ்போர்ட் சேவை திட்டத்தின் இணை செயலாளரும், தலைமை பாஸ்போர்ட் அதிகாரியுமான திரு கே.ஜெ. ஸ்ரீனிவாசா தொடங்கி வைத்தார். விழாவுக்கு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு எஸ். விஜயகுமார் தலைமை வகித்தார்.
அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தற்போதுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களின் சேவைகளை தவிர, இந்த நடமாடும் வேன், புறநகர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வீடு தேடி சென்று பாஸ்போர்ட் சேவைகளை வழங்கும். இதன்மூலம், பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், சேவைகளை நேரில் பெற்று பயனடையலாம்.
ஆன்லைன் பதிவு வசதி:
இந்நடமாடும் வேன் முதலில் தாம்பரம் பகுதியில் நிறுத்தப்படும். அதன் பின்னர், அதிக விண்ணப்பங்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று சேவை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவா போர்ட்டல் மூலம், ஆன்லைனில் முன்பதிவு செய்து இச்சேவையைப் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.