சுங்கச்சாவடிகளில் கட்சிக் கொடி கட்டிய வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு; கேள்வி கேட்ட பொதுமக்கள் மீது தாக்குதல் – நீதிபதிகள் வேதனை
தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை இயக்கும் நிறுவனங்கள் சாலை ஓரங்களில் மரம் மற்றும் செடிகள் நடுவதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பேற்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், இந்த வசதிகளை ஏற்படுத்தும் வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தடை செய்யவேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
இந்த மனுவை முன்னதாக விசாரித்த மதுரை அமர்வு, குறித்த நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலைத் தற்காலிகமாகத் தடை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் பேரில், உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியது.
இந்தப் பின்னணியில், மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியா கிளாட் அமர்வில் நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலைத் துறை தரப்பில், உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மனுதாரர் தரப்பில் சமீபத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் தஞ்சாவூர் நீதிபதி ஒருவருக்கு காயம் ஏற்பட்டதும், அவருடன் பயணித்தவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில், சுங்கச் சாவடிகளில் கட்சிக் கொடி கட்டிய வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்காமல் விடப்படுவது, ஆனால் பொதுமக்கள் கேள்வி கேட்டாலே சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குவது போன்ற சம்பவங்களை நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.
மேலும், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழிகள் மற்றும் பாதைகள் சீரமைக்கப்பட வேண்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், வாகன வேகங்கள் நவீன முறையில் கண்காணிக்கப்பட வேண்டும், சாலை பராமரிப்புப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.