பாஸ்போர்ட்டிற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தம் – அரசு நடவடிக்கை
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும் புதுப்பிக்கவும் தேவையான செயல்முறைகள் இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளன. இதற்காக, அரசு ஊழியர் நடத்தை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான அரசாணையை தலைமைச் செயலர் திரு ந. முருகானந்தம் வெளியிட்டுள்ளார். அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறும் போதும், புதுப்பிக்கும் போதும் அடையாளச் சான்றிதழ் மற்றும் தடையின்மைச் சான்றிதழ் (NOC) பெறும் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, “எளிமை ஆளுமை” (Simplified Governance) என்ற அரசுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி ஆகும்.
இந்த மாற்றத்தை செயல்படுத்த ஆய்வுக் குழு மற்றும் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரைகளை ஏற்று 1973-ஆம் ஆண்டு அரசு ஊழியர் நடத்தை விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தற்போது பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்க விரும்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களது நிர்வாகத் தலையிடம் IFHRMS செயலி மூலமாக தகவல் அளித்து, பாஸ்போர்ட்டுக்காக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
மண்டல பாஸ்போர்ட்ட் அலுவலகம் கூடுதல் தகவல்களை கோரும் நிலை ஏற்படுமானால், சம்பந்தப்பட்ட நிர்வாகத் தலைமை அதிகாரி அவசர தேவைக்கு ஏற்ப NOC அல்லது அடையாளச் சான்றிதழ் அல்லது இரண்டையும் வழங்க முடியும்.
வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வதற்காக இருந்தால், NOC கட்டாயம் பெறவேண்டும். ஆனால், அரசு ஏற்பாடு செய்துள்ள புனித பயணங்கள் (அறப்பணி) போன்றவற்றுக்கு செல்லும் போது NOC தேவையில்லை எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.