தமிழகத்தில் 25-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மேற்கு திசையில் வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளால், இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், ஜூன் 21 முதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இதேபோன்ற மழை தொடர வாய்ப்புண்டு.
இன்றும், நாளையும் தமிழகத்தின் சில பகுதிகளில் சாதாரணத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிக வெப்பநிலை காணப்படும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழையும் பெய்யலாம்.
தென் தமிழகக் கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 21 முதல் 23 வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில், இடைவேளையில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையளவு விவரம்:
நேற்று காலை 8.30 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர், நடுவட்டம், கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை, உபாசி ஆகிய இடங்களில் 5 செ.மீ.,
நீலகிரி மாவட்டம் பார்வூடு பகுதியில் 4 செ.மீ.,
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.