சென்னையில் ‘ஆக்மி 2025’ கண்காட்சி தொடக்கம்: தமிழக வளர்ச்சி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

0

சென்னையில் ‘ஆக்மி 2025’ கண்காட்சி தொடக்கம்: தமிழக வளர்ச்சி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (ஐமா) ஏற்பாட்டில் நடைபெறும் 16-வது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி ‘ஆக்மி 2025’ நேற்று சென்னையின் நந்தம்பாக்கம் வர்த்தக வளாகத்தில் துவங்கியது. சுமார் 30,000 சதுர அடிகளில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் 500-க்கும் அதிகமான அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்வில் பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

“நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 11.90% ஆகும். இந்திய அளவில் பதிவுசெய்யப்பட்ட 35 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களில் தமிழகம் 3-வது இடத்தை வகிக்கிறது. இதன்மூலம் 2.47 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. தற்போதுவரை 14 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

“மோட்டார் வாகனங்கள், ஆயத்த ஆடைகள், தோல் உற்பத்தி ஆகிய துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. ஜவுளி இயந்திரங்கள் மற்றும் மின்னணு உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 14.90 லட்சம் பெண் தொழிலாளர்களில், 6.30 லட்சம் பேர் தமிழகத்திலுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.

“2024-25ம் ஆண்டில் தமிழகம் 30.50 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்து, தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் சுயதொழில் திட்டத்தின் கீழ் 59,915 தொழில் முனைவோர்களுக்கு ₹2,031 கோடி மானியத்துடன் ₹5,210 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.”

“கடன் உத்தரவாதத் திட்டத்தின் மூலம் 42,278 நிறுவனங்களுக்கு ₹7,578.53 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் எம்எஸ்எம்இ துறைக்கு ₹1,918.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய 10 ஆண்டுகளில் ₹3,617.62 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ₹6,626 கோடி வழங்கப்பட்டுள்ளது. தொழில் துறையில் தமிழகத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.”

முன்னதாக, ஐமா தலைவர் சதீஷ்பாபு கூறியதாவது:

“அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 2,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். எனினும், இடவசதி பற்றாக்குறை உள்ளது. எனவே, தொழிற்பேட்டைக்கு அருகில் 1,000 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செயலர் அதுல் ஆனந்த், சிட்கோ தலைவர் ஆ.கார்த்திக், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கண்காட்சி ஜூன் 23-ம் தேதி வரை நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here