கிருஷ்ணகிரியில் ‘கிரிஷ்மா’ திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தல்
மாங்கூழ் பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தலுக்காக 2006ஆம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, கிருஷ்ணகிரியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மை பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் 35,000 ஹெக்டேருக்கும் அதிகமாக மா சாகுபடி நடைபெறுகிறது. ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வறட்சி மற்றும் மாங்கூழ் தொழிற்சாலைகளின் சிண்டிகேட் செயல்பாடுகள், நியாயமான விலையில் மாங்காய் கொள்முதல் நடைபெறாதது ஆகிய காரணங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிகழாண்டில் மகசூல் அதிகரித்துள்ள போதும், விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் வருமான இழப்பை சந்தித்து வருகின்றனர். மேலும், மாங்கூழ் ஏற்றுமதி சரிவடைந்ததால் கடந்த ஆண்டின் போல் கொள்முதல் நடைபெறவில்லை.
இந்நிலையில், மா விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்குடன் அறிவிக்கப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சத்துணவுத் திட்டத்தில் மாங்கூழ் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்பதே அவர்களது விருப்பம்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறியதாவது:
“கிருஷ்ணகிரியில் ஆண்டுதோறும் சுமார் 3.5 லட்சம் மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 லட்சம் மெட்ரிக் டன் மாங்காய் நுகர்வுக்கு மற்றும் மாங்கூழாக மாற்றி ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 1.5 லட்சம் மெட்ரிக் டன் மாங்காய்கள் வீணாகின்றன.
இந்த நெருக்கடியை தீர்க்க, 2006ஆம் ஆண்டு ரூ.150 கோடியில் ‘கிரிஷ்மா’ திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆலப்பட்டியில் 75 ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் தயாரிக்கப்படும் மாங்கூழ், ஒரே பெயரில் (Krishma) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வகையில் திட்டம் அமைக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் இத்திட்டம் செயலிழந்துவிட்டது. தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களை சரி செய்ய, இதனை மீண்டும் செயல்படுத்த முதல்வர் நேரடியாக தலையீடு செய்து தீர்வு காண வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.