கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் திட்ட விவரம் அடங்கிய பலகை கட்டாயம்: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்

0

மனைப் பிரிவு மற்றும் கட்டுமானத் திட்டங்கள் நடைபெறும் இடங்களில், அவற்றின் திட்ட விவரங்களை உள்ளடக்கிய தகவல் பலகையை கட்டாயமாக நிறுவ வேண்டும் என ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகமெங்கும் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் தங்களுடைய குடியிருப்பு மற்றும் வணிகத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மேலும், நில மேம்பாட்டாளர்கள் பல இடங்களில் மனைப் பிரிவு திட்டங்களை அறிவித்து விற்பனை செய்கின்றனர். இவர்கள் பொதுமக்கள் பார்வைக்கு எளிதில் தெரியும் இடங்களில் — மக்கள் கூடும் பகுதிகள், உயரமான கட்டிடங்கள் போன்றவற்றில் — விளம்பர பலகைகள் வைக்கின்றனர். ஆனால் அவற்றில் திட்டத்தின் முழுமையான விவரங்கள் இடம்பெறுவதில்லை.

இந்த சூழலில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் அண்மையில் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். அதன் படி, எந்தவொரு கட்டுமானத்திற்கும் அல்லது மனைத் திட்டத்திற்கும் தொடர்பான தகவல் பலகையை, குறைந்தது 2 அடி உயரம் மற்றும் 4 அடி அகலம் கொண்டதாக, திட்டம் நடைபெறும் இடத்தில் கட்டாயமாக நிறுவ வேண்டும்.

அந்த பலகையில் மேம்பாட்டாளர் பெயர், திட்டத்தின் பெயர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பெற்ற பதிவு விவரம், திட்டம் நிறைவடையும் தேதி, மற்றும் அந்த ஆணையத்தின் இணையதள முகவரி ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இந்த பலகை தனித்துவமாக இருக்கவேண்டும்; இதை மற்ற விளம்பர பலகையுடன் இணைத்தால் அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் எளிதாக படிக்கக்கூடிய அளவில் எழுத்துரு இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திட்டம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட பிறகு, அந்த தகவல் பலகையை நிறுவும்போது கட்டுமானப் பொறியாளரின் சான்றிதழ் மற்றும் திட்டத்தின் புகைப்படம் ஆகியவையும் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here