ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தகவல்

0

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட சென்றுள்ளனர். தற்போது அங்கு போர் சூழ்நிலை நிலவுவதால், அவர்கள் தொடர்பில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மீனவர்களின் குடும்பத்தினர், அவர்களை மீட்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட மீனவர் பிரதிநிதிகள், சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவையும் மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமாரையும் நேரில் சந்தித்து, ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, மீனவர் பிரதிநிதிகள், சிக்கியுள்ளவர்களை மீட்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு. அப்பாவு கூறியதாவது:

“திருநெல்வேலி மாவட்டத்தின் பல மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் ஈரானில் உள்ள தீவுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால், அவர்கள் தொடர்பில் வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

உவரி பகுதியில் இருந்து 36 பேர் ஈரானில் இருக்கின்றனர் என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர். ராதாபுரம் மற்றும் திசையன்விளை வட்டாட்சியர்களின் மூலம் ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களைப் பற்றி கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக முதல்வர், ஈரானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து, தாயகத்திற்கு அழைத்து வர முதல்வர் தயார் நிலையில் உள்ளார். கிஸ் தீவில் சிக்கியுள்ளவர்களை சந்திக்க அயலக வாரியத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம், திருநெல்வேலி மாவட்டத்தை மட்டும் சேர்ந்ததல்லாது, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் பொருத்தது என்பதால், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வரின் தனிச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், ஈரானில் உள்ள தமிழர்களின் தகவல்களை ஆன்லைன் வழியாக பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here