மினி பேருந்து திட்டத்தின் மூலம் 90,000 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம்

புதிய விரிவாக்கப்பட்ட மினி பேருந்து திட்டத்தின் மூலம் 90,000 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் குறித்தும் அதன் தாக்கத்தைப் பற்றியும் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

பேருந்து சேவைகள் இல்லாத சிறிய மற்றும் தொலைதூர கிராம பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் நோக்குடன், 1997-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் திரு கருணாநிதியின் தலைமையில் மினி பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தின் கீழ், தலா 25 கிலோமீட்டர் வரை மினி பேருந்துகள் இயக்கப்படுவதுடன், முக்கிய அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக 1 கிலோமீட்டர் தூரம் வரை சேவையை விரிவுபடுத்தும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் விளைவாக, தற்போது 3,103 பேருந்து பாதைகளில் 90,000 கிராமப்புறங்கள் பேருந்து சேவையால் நன்மைபெறுகின்றன. இதனால் சுமார் 1 கோடி மக்கள் தினசரி பயண வசதியை அனுபவிக்கின்றனர். இந்த புதிய திட்டத்தை முதல்வர் திரு மு.க. ஸ்டாலின், கடந்த 16ஆம் தேதி தஞ்சாவூரில் தொடங்கி வைத்தார்.

முன்பு பேருந்து ஏற்கனவே வந்து செல்லாத பகுதிகளில், இந்த சேவையை மக்கள் ஆவலுடன் வரவேற்கின்றனர். ஒரு மூதாட்டி தரையில் குனிந்து பேருந்தை வரவேற்றதோடு, சிலர் கற்பூரம் ஏற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவ்வாறு, இந்த மினி பேருந்து சேவை சுமார் 1 கோடி மக்களுக்கு பெரும் நன்மையைத் தருவதுடன், பரந்த அளவில் வரவேற்பும் பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Facebook Comments Box