கிண்டி வளாகத்தில் ரூ.488 கோடியில் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை – செப்டம்பரில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.487.66 கோடி மதிப்பில், குழந்தைகளுக்காக தனித்திறனுடைய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இத்திட்டம் சார்ந்த நிலத்தடி ஆய்வு மற்றும் கட்டுமான பணிகளை அமைச்சர் நேற்று நேரில் பார்வையிட்டார். அதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
“கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.450 கோடியில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல, தேசிய முதியோர் நல மருத்துவமனையும் செயல்படுகிறது.
இப்போது, சுமார் 6.5 ஏக்கர் பரப்பில், தரைத்தளத்துடன் 6 மாடிகள் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவமனை கட்டப்படுகிறது. அதற்காக ரூ.487.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிக்கல்லை முதலமைச்சர் ஸ்டாலின் செப்டம்பரில் இட உள்ளார். 2 ஆண்டுகளில் மருத்துவமனை முடித்து விட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இது இயங்கும்.”
இந்த நேரத்தில், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு இயக்குநர் அருண் தம்புராஜ், திட்ட இயக்குநர் வினீத், டாக்டர் எம்ஜிஆர் பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி, பதிவாளர் சிவசங்கீதா, கிங் இன்ஸ்டிடியூட் இயக்குநர் இந்துமதி, மற்றும் மருத்துவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.