பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்கோவில் வரை 7 இடங்களில் நடை மேம்பாலம்: ரூ.20 கோடியில் பணிகள் தீவிரம்

0

காட்டாங்கொளத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளுக்கு தீர்வாக நடைமேம்பாலங்கள் அமைக்கப்படும்

தமிழகத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சால்களில் ஒன்றான சென்னை–திருச்சி சாலை, காட்டாங்கொளத்தூர் பகுதியில் நான்கு வழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினசரி வாகனப் போக்கு மிக அதிக அளவில் காணப்படுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்கோவில் வரை உள்ள சாலை ஏற்கனவே நான்கு வழியில் இருந்து எட்டு வழியாக மாற்றப்பட்டது. தற்போது, சிங்கப்பெருமாள்கோவில் முதல் திருச்சி வரை எட்டு வழிச் சாலையாக மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நெடுஞ்சாலையில், வேகமாக செல்லும் வாகனங்களால் சாலை கடக்கும் இடங்களில் நிகழும் விபத்துகள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலருக்கு படுகாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனை தடுக்கும் நோக்கில், பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்கோவில் வரையிலான பகுதிகளில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ரூ.20.48 கோடி செலவில் ஏழு இடங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில், வண்டலூர் ரயில் நிலையம், தைலாவரம் எஸ்டான்சியா டெக்பார்க், பொத்தேரி வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மறைமலைநகர் பேருந்து நிலையம் மற்றும் சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் 60 டன் எடையுடன் 61 மீட்டர் நீளமுள்ள இரும்பு நடைமேம்பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் பணிகள் மெதுவாக முன்னேறி வருகின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர் ஈஸ்வரன் கூறியதாவது:

“வாகன போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் ஏழு இடங்களில் நடைமேம்பாலம் அமைக்கப்படுவது மிகவும் பாராட்டத்தக்கது. இது, விபத்துகள் குறைவதற்கும், வாகனங்கள் தடையில்லாமல் செல்லும் வகையிலும் உதவிகரமாக இருக்கும். ஆனால், தற்போது கட்டப்படும் மேம்பாலங்களில் எஸ்கலேட்டர் அல்லது லிப்ட் வசதி இல்லாவிட்டால், பொதுமக்கள் அதை தவிர்த்து நேரடியாக சாலையை கடந்துவிட வாய்ப்பு அதிகம். இதனால் மீண்டும் விபத்தும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படலாம்,” எனக் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: “மறைமலைநகர் கீழக்கரணை, மகேந்திர சிட்டி, நந்திவரம் போன்ற இடங்களிலும் நடைமேம்பாலம் கட்டுவது அவசியம். இப்பகுதிகளில் தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெற்று வருவதால், பொதுமக்களின் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here